யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா

யேர்மனியில் தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா 30 .3.2019 சனிக்கிழமை யேர்மனி Korchenbourch என்னும் நகரத்தில் வாகை
சூடியவரையும் வளப்படுத்தியவரையும் மதிப்பளிக்கும் பெருவிழா எனும் தலைப்பில் மிகச் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வு தொடர்ச்சியாக யேர்மனியில் உள்ள ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ளது.

காலை பத்துமணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் இந்த மாநிலத்தில் உள்ள தமிழாலயங்கள் பங்குபற்றியிருந்தன. 2018 ஆம் ஆண்டு பொதுத்தேர்விலும், கலைத்தேர்விலும், தமிழ்த்திறன் போட்டியிலும்,  யேர்மனி முழுவதுமாகத் தேர்ச்சி பெற்ற முதல் மூன்று மாணவர்களுள் இந்த மாநிலத்தில் உள்ள மாணவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.

பிரதமவிருந்தினர்களாக யாழ். பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் திரு. அருணாசலம் சண்முகதாஸ் அவர்களும், முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும், யேர்மனி கிறிபில்ட் நகரத்தைச் சேர்ந்த அருட்தந்தை அல்பேட் கோலன் அவர்களும், மற்றும் யேர்மனியின் தேசியச் செயற்பாட்டாளர்களும். யேர்மனியில் இருபது வருடங்களுக்கு மேலாக தமிழ்ப்பணியாற்றிய தமிழ் வாரிதிகளும் தமிழ்மானிகளும் கலந்து கொண்டனர்.  மண்டப வாசலில் இருந்து மாணவர்கள் ஆசிரியர்கள, தமிழ்க் கல்விக் கழகத்தின் செயற்பாட்டாளர்கள், ஆகியோர் இவர்களை அழைத்துச் செல்ல மண்டபத்திற்குள் பெற்றோர்களும், பார்வையாளர்களும்  எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.

 பின்பு மங்கலவிளக்கு ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு தமிழாலய மாணவர்களின் தமிழாலய கீதத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. வரவேற்புரையை தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் திரு. செல்லையா லோகானந்தம் அவர்கள் ஆற்றினார், பின்பு கலைநிகழ்வுகளுடன் மதிப்பளிப்புக்களும் ஆரம்பமாகின. தமிழ்க் கல்விக் கழகத்தின் இளைய செயற்பாட்டாளர்களின் நெறிப்படுத்தலில் தமிழாலயங்களில் உள்ள இளையவர்களையும் இணைத்து இந் நிகழ்வை சிறப்பாக நடாத்தியிருந்தனர்.

மாணவர்களின் மதிப்பளிப்பைத் தொடர்ந்து தமிழாலய ஆசிரியர்கள்,  நிர்வாகிகள், மதிப்பளிக்கப்பட்டனர். இருபது வருடங்களுக்கு மேலாக தமிழ்ப்பணியாற்றிய ஆசிரியர்களுக்கு தமிழ் வாரிதி என்னும் மதிப்பளிப்பும் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு தமிழ்மானி எனும் மதிப்பளிப்பும் வழங்கப்பட்டது.

சென்ற வருடம் யேர்மனி முழுவதிலும் உள்ள தமிழாலயங்களில் பயின்ற 270 மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பை நிறைவு செய்து மதிப்பளிப்புக்கான தகுதியைப் பெற்றிருந்தனர். இவர்களுள் 65 மாணவர்கள் இந்த மேடையில் மிகச்சிறப்பாக மதிப்பளிக்கப்பட்டனர்.


No comments