பதினோராவது பீடமாக இந்து கற்கைகள் பீடம் !


இந்து நாகரிகத் துறை, சைவ சித்தாந்தத் துறை, சமஸ்கிருதத் துறை ஆகியன உள்ளடங்கலாக யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பதினோராவது பீடமாக இந்து கற்கைகள் பீடம் உருவாக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இந்து கற்கைகளுக்கென தனியான பீடம் ஒன்றினை அமைப்பதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது.
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக் கழகங்கள் சட்டத்தின் 27 (1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதந்துரைக்கமைவாக நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ஏ. இபதுல் ரவூஃப் ஹக்கீம் ஒப்பமிட்டு கடந்த மார்ச் 18 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள 2115/5 ஆம் இலக்க அதி விஷேஷ அரசிதழ் மூலம் இதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலின் படி யாழ். பல்கலைக் கழகத்தில் தொழில் நுட்ப பீடத்தை அடுத்து 11ஆவது பீடமாக இந்து கற்கைகள் பீடம் அமையவுள்ளது. இந்து நாகரிகம், சைவ சித்தாந்தம், சமஸ்கிருதம் ஆகிய துறைகள் இந்து கற்கைகள் பீடத்தினுள் உள்வாங்கப்படவுள்ளன.
மிகப் பழமை வாய்ந்த இந்துப் பாரம்பரியத்தைக் கொண்டமைந்த யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தை நிறுவிய காலத்தில் இருந்தே இந்து நாகரிகத்துறைக்கென தனியான பீடமொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த போதிலும் சேர். பொன். இராமநாதனின் கனவு இப்போது தான் மெய்பட காலம் கனிந்துள்ளது என மூத்த கல்வியியலாளர்கள் மகிழ்சியடைந்துள்ளனர்.

No comments