போராளிகள் விசாரணைக்கு அழைப்பு

இலங்கை இராணுவத்தின் கஜபாகு படைப்பிரிவினரால் முன்னாள் போராளிகள் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஈஸ்ரர் தினத்தன்று இஸ்லாமிய தீவரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் பல அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர். இதனையடுத்து நாடுமுழுவதும் சோதனை நடவடிக்கைகளும் கைதுகளும் நடைபெற்றுவருகின்றது.

இந்நிலையில் யாழ் நகரில் வசிக்கும் முன்னாள் போராளிகளை நாளை மாலை 4.00 மணிக்கு யாழ்.நகரத்தில் உள்ள கஜபாகு றெஜிமன்ட் முகாமிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் போராளிகளின் விபரங்கள் படையினரிடம் ஏற்கனவே உள்ள நிலையில் முதலில் தொலைபேசியில் முன்னாள் போராளிகளுக்கு அழைப்பு எடுத்து நாளை படை முகாமிற்கு வாருங்கள் என தெரிவிக்கப்பட்டது.

பின்னர் மீண்டும் தொலைபேசி அழைப்பு எடுத்த இராணுவத்தினர் அவர்கள் இருக்கும் இடத்தினை கேட்டு தெரிந்து கொண்ட பின்னர் அவர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் பணிபுரியும் இடத்திற்கு ஒரு வெள்ளை நிற வானில் ஏறத்தாழ நான்கு ஐந்து இராணுவத்தினர் நேரில் சென்றும் விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துச் சென்றுள்ளனர்.

நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு முன்னாள் போராளிகளை விசாரணைக்கு அழைத்துள்ளமை ஒருவித அச்ச நிலையைத் தோற்றுவித்துள்ளது.

No comments