அன்னை பூபதியின் நினைவேந்தல் அழைப்பு


தமிழ்த் தேசத்தின் தாய் அன்னை பூபதியின் 31 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை (18.04.2019) காலை  10.00 மணிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த அந்தக் காலத்தில் இந்தியப் படைக்கு எதிராக குரல் கொடுக்க, அறப் போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது.     உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்டுத்த வேண்டும்.  புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும் என்ற இரு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தை முன்னெடுக்க முடிவுசெய்யப்பட்டது.

அப்போது பலர் சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தில் குதிப்பதற்காக முன்வந்தனர். இறுதியில் குலுக்கல் முறையில் தேர்வு இடம் பெற்றது. முதலில் அன்னம்மா டேவிட் தெரிவு செய்யப்பட்டார். 1988ஆம் ஆண்டு பெப்ரவரி 16 ஆம் நாள் அமிர்தகழி மாமாங்கேஸ்வர் கோயிலில் அன்னம்மாவின் உண்ணாநோன்புப் போராட்டம் தொடங்கியது. ஆனால் படையினர் உண்ணாவிரத மேடையில் இருந்தவரைக் கடத்திச் சென்றதில் அவரால் தனது போராட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.

இந்த நிலையில் மட்டக்களப்பு - அம்பாறை அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளராக திகழ்ந்த  பூபதியம்மாள் தன் போராட்டத்தை மார்ச் 19 1988 இல் தொடங்கினார். முன்னெச்சரிக்கையாக "சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது" எனக் கடிதம் எழுதி வைத்தார்.பத்துப்பிள்ளைகளுக்கு, தாயார் இவர்.நீர் மட்டும் அருந்தி சாகும் வரை உண்ணாநோன்பு இருந்தார்.இடையில் பல தடங்கல்கள் வந்தன.உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும், அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும், இந்திய இராணுவம் கைது செய்தது. ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார். கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒரு மாதத்தின் பின் 19.04.1988 அன்று உயிர் நீத்தார். 

அன்னைர் பூபதி அம்மாவிற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நாட்டுப்பற்றாளர் கௌரவம் வழங்கியிருந்தனர்.

No comments