திறக்கப்படுகிறது தமிழ் மக்கள் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனை

அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய எம் இனிய மக்களே,

எமது உரிமைகளை மீட்டெடுப்பதற்காக பல தசாப்தங்களாக நீதி வழி நின்று போராடி வருகின்றோம். சொல்லொணாத் துன்பங்களையும் துயரங்களையும் தாங்கி மாபெரும் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு தொடர்ச்சியாக இன நீதி மறுக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே அடிமைகளாக வாழ்கின்ற துயர் நிலையைக் கொண்டவர்களாக நாம் வாழ்ந்து வருகிறோம்.
மூன்று தசாப்தங்களாக தமிழர்களின் ஆயுதம் தழுவிய உரிமை மீட்புப் போராட்டம் துரதிஸ்டவசமாக 2009 மே மாதத்தோடு மௌனிக்கப்பட்டு இவ்வாண்டோடு பத்தாண்டுகள் நிறைவுபெறுகின்றன. இந்நிலையிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட முன்மொழிவுகள் முன்வைக்கப்படாமலும் இனப்படுகொலைக்கான நீதி, போர்க்குற்ற விசாரணை, வலிந்து காணமலாக்கப்பட்டோருக்கான நீதி,  தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகள் விடுவிப்பு போன்ற விடயங்களில் ஆட்சி அதிகாரத்திற்கு வருகின்ற அரசாங்கங்களின் தொடர்ச்சியான ஏமாற்று நாடகமும் அரச எதிர்ப்பில்லாத தமிழ் அரசியல் தலைவர்களின் நிலைப்பாடும் தமிழ் மக்களாகிய எமது மனதில் ஆறாத காயத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன.

இதன் விளைவாகவே கொள்கையில் உறுதியோடு, இன விடுதலையை முதன்மைப் படுத்தி, நீதியின் வழி நின்று செயலாற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களின்  கரங்களைப் பலப்படுத்தி தமிழ் மக்கள் கூட்டணி என்கின்ற கட்சியை நிறுவ வேண்டியது காலத்தின் கட்டயாமாகிறது.

மதிப்புக்குரிய கிளிநொச்சி வாழ் மக்களே,

தமிழர்களின் சமூக மேம்பாட்டுக் கட்டமைப்புக்களின் தலைமையகமாகவும் தமிழர்களின் அரசியல் கோட்டையாகவும் கோலோச்சிய கிளிநொச்சி மாநகரம் தொடர்ந்தும் கொள்கை வழிநின்று, இனவாத சக்திகளினதும் அதற்குத் துணைபோகும் தரப்புகளினதும் சதிவலைகளை முறியடித்து  மண்ணின் மகத்துவத்தைக் காத்து தமிழ்த் தேசிய விடுதலையை முன்னெடுப்பதில் முன்னுதாரணமாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் கிளிநொச்சியில்  தமிழ்  மக்கள் கூட்டணியின் மக்கள்  பணிமனை 10-03-2019 அன்று காலை 10 மணிக்கு துர்க்கை அம்மன் வீதி இல 258 ஆனந்தபுரம் கிளிநொச்சியில் கட்சியின்  செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படுகின்றது. இந்நிகழ்விலும் கட்சி சார் செயற்பாடுகளிலும் தமிழ்த் தேசியத்தை பலப்படுத்தும் பணியில் எம்மோடு பயணிக்க அனைவரையும் அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.

தன்னாட்சி – தற்சார்பு –  தன்னிறைவு.

நன்றி

தமிழ் மக்கள் கூட்டணி
கிளிநொச்சி மாவட்டம்

No comments