கச்சதீவு திருவிழா 15ம் திகதி!


கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலர் என்.வேதநாயகன் அறிவித்துள்ளார்.

அதேவேளை இம்முறை திருவிழாவுக்கு இலங்கையிலிருந்து 7 ஆயிரம் வரையான பக்தர்களும் இந்தியாவிலிருந்து 2 ஆயிரத்து 200 பேர் வரையிலும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


இம்மாதம் 15, 16 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கான முன்னேற்பாட்டு இறுதிக் கூட்டம் மாவட்ட செயலர் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

இதில் மிக முக்கியமாக சுமார் பத்தாயிரம் வரையிலான யாத்திரீகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி அதிகாலை 3.30 மணிமுதல் யாழ்ப்பாண மத்திய பஸ் நிலையத்திலிருந்து பஸ்கள் குறிகட்டுவானை நோக்கிப் புறப்படும். அந்தச் சேவைகள் காலை 10.30 மணிவரை தொடர்ந்து நடைபெறும். அதேபோன்று 16 ஆம் திகதி காலை முதல் குறிகட்டுவானிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான விசேட பஸ் சேவைகள் நடாத்தப்படும்.

மேலும் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களின் நலன் மற்றும் வசதி கருதி கூடுதலான பஸ் சேவைகள் ஒழுங்குபடுத்தப்படுவதோடு குறிகட்டுவானிலும் நீர் மலசல கூட வசதிகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.

கடந்த முறை போன்று இம்முறையும் கூடுதலான பக்தர்கள் வருவார்களாக இருந்தால் போக்குவரத்து பிரச்சினை உள்ளது. எங்களிடம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தான் படகுச் சேவைகள் இருக்கின்றன. ஆகவே ஆலயத்திற்கு வரவிருக்கின்றவர்கள் 15 ஆம் திகதி காலையிலேயே குறிகட்டுவானுக்கு வந்து படகுகில் ஏறிச் செல்லுமாறு கோரப்பட்டுள்ளது.

No comments