மார்ச் 16 யாழில் எழுச்சிப்போராட்டம்!


ஈழத் தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு நீதியினை கோரி மக்கள் எழுச்சிப் போராட்டம் ஒன்றினை எதிர் வரும் 16ம் திகதி முன்னெடுக்க யாழ்.பல்கலைக்கழக சமூகம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் என்பவை இலங்கையில் நீண்ட காலமாக கட்டமைக்கப்பட்ட ரீதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அத்தகைய அடக்குமுறைகள் இலங்கைத்தீவில் திட்டமிடப்பட்ட ரீதியிலான தமிழ் மக்களிற்கு எதிரான இனச்சுத்திகரிப்பாகவே உள்ளது. அத்தகைய இனச்சுத்திகரிப்பின் உச்சமே இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டும், காணாமலாக்கப்பட்டும் ஈழத் தமிழர்களிற்கு எதிராக இடம்பெற்ற இன அழிப்பு, போர்க்குற்ற மீறல்கள், மனித உரிமைச் சட்ட மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள்களிற்குரிய பரிகார நீதியினை சர்வதேசம் தமிழ் மக்களிற்கு பெற்றுத்தர நாம் விழிப்போடு மக்கள் எழுச்சிப் போராட்டங்களினனை முன்னெடுக்க வேண்டும்.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையினால் 2015ல் முன்மொழியப்பட்ட நிலைமாறுகால நீதிப் பொறிமுறைக்கு ஊடான உள்ளக பொறிமுறைகளினையே இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற தவறிய நிலையிலும் ஏற்கனவே கால அவகாசங்கள் வழங்கப்பட்ட நிலையிலும் மீண்டும் கால அவகாசமே வழங்கப்படவுள்ளது. இதனை வெறும் கண்துடைப்பு நாடகமாகவே நாம் நோக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில் ஈழத் தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு நீதியினை கோரி மக்கள் எழுச்சிப் போராட்டம் ஒன்றினை எதிர் வரும் 16ம் திகதியன்று  முன்னெடுக்க தீர்மானத்துள்ளோம். எனவே நீதி கோரி இடம்பெற இருக்கும் மக்கள் எழுச்சிப் பேரணிக்கு தமிழ் பேசும் மக்களினை அலைகடலென திரண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒன்று கூடுமாறு அழைக்கிறோமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments