பலாலி விமான சேவைக்கு முதலிட வருமாறு சிறிலங்கா அரசு அழைப்பு

யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கான விமான சேவையில் முதலீடு செய்யுமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனியார் துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பில் நடந்த வணிக மாநாடு ஒன்றில், தம்மிக பெரேரா என்ற வணிகர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானங்கள் இயக்கப்படுவதில்லை என்றும், இது புலம்பெயர் தமிழர்களின் முறைப்பாடு என்றும், கூறியிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமது உறவுகளை பார்க்க செல்லும் போது, கட்டுநாயக்கவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானத்தில் செல்ல முடியாதிருப்பதாக அவர்கள் முறையிடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளித்து உரையாற்றிய சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “யாழ்ப்பாணத்துக்கோ, இந்தியாவுக்கோ யாரேனும் விமான சேவைகளை நடத்த முடியும். அதற்கான கதவுகளை அரசாங்கம் திறந்தே வைத்திருக்கிறது. தனியார் துறையினர் இதற்கான முயற்சிகளை எடுக்கலாம்” என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய சிறிலங்காவுக்கான துருக்கி தூதுவர், “ ஐரோப்பாவில் இருந்து கொழும்புக்கு விமானத்தில் பயணம் செய்ய 10 மணிநேரம் ஆகிறது. ஆனால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கல்கிசையில் உள்ள விடுதிக்கு, தரை மார்க்கமாக செல்வதற்கு, வெறும் 43 கி.மீ பயணம் செய்வதற்கு 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள் தேவைப்படுகிறது.

விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்கவில் அருகில் உள்ள பேருந்து நிலையத்துக்கு செல்வதற்கு உள்ளூர் போக்குவரத்து வசதிகள் இல்லை.” என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

No comments