13 ஐ நடைமுறைப்படுத்தச் சொல்கிறது இந்தியா

சிறிலங்கா அரசாங்கம் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று நடந்த விவாதத்தில் உரையாற்றிய இந்திய பிரதிநிதி ரஜீவ் கே சந்தர்,

‘நெருக்கமான அண்டை நாடான சிறிலங்காவின் நிலைமைகளில் இருந்து இந்தியா விலகியிருக்க முடியாது.

ஒன்றுபட்ட சிறிலங்காவில்  சமத்துவமான, நீதியான, அமைதியான, கௌரவமாக வாழும் வகையில், இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரதும், அபிலாசைகளை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக,  பல இன, பல மொழி, பல சமய, சமூக சிறிலங்காவின் குணவியல்பை பாதுகாக்கும் முயற்சிகளுக்கு இந்தியா எப்போதும் ஆதரவு அளித்து வந்துள்ளது.

சிறிலங்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு மேற்கொண்ட சாதகமான நடவடிக்கைகளை கவனத்தில் கொள்கிறோம்.

சிறிலங்கா அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட அனைத்துலக  சமூகத்திற்கு வழங்கிய, ஏனைய முக்கியமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments