மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு கண்டனம்!
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் குற்றச் செயல்களுடன்
தொடர்புபட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கையின் இராணுவ தலைமை
அதிகாரியாக, நியமிக்கப்பட்டமைக்கு, ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள
இலங்கை தொடர்பான அறிக்கையில் இவ் விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை கடந்த வியாழக்கிழமை பகிரங்கப்படுத்தப்பட்டது. அந்த
அறிக்கையிலேயே, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனத்துக்கு இவ்வாறு
கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா போரின்
இறுதிக்கட்டத்தில் இலங்கை இராணுவத்தின் 58 ஆவது டிவிசனின் கட்டளை
அதிகாரியாக இருந்தவர் என்றும் அவரது கட்டுப்பாட்டில் இருந்த படையினர்,
சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களை
மீறினார்கள் என்று, ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்த நிபுணர் குழுவின்
அறிக்கையிலும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை
அறிக்கையிலும், இது தொடர்பில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதாகவும்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ் விடயங்கள் தொடர்பில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில்
எதிர்வரும் 20ஆம் திகதி 15 பக்கங்களைக் கொண்ட, இலங்கை தொடர்பான அறிக்கையை
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பசெலெட் சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment