பலாலியால் சீற்றத்தில் மகிந்த அணி


மத்தல சர்வதேச விமான நிலையத் திட்டத்தை பயனற்றது என்று விமர்சிக்கும் அரசாங்கம் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளது ஏன் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் வடக்கிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது, 20 பில்லியன் ரூபா செலவில் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தும் திட்டம் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

”இது மிகவும் ஆச்சரியம் அளிக்கிறது. மத்தல விமான நிலையம் அமைக்கப்பட்ட போது நாட்டுக்கு இரண்டாவது அனைத்துலக விமான நிலையம் தேவையற்றது என்று கூறியவர்கள், திடீரென யாழ்ப்பாணத்தில் பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்த முனைவது ஏன்?” என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் றோகித அபேகுணவர்த்தன கேள்வி எழுப்பினார்.”

மத்தல விமான நிலையம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில், எதற்காக மூன்றாவது அனைத்துலக விமான நிலையம்?

பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படுவதை நான் எதிர்க்கவில்லை.ஆனால் அனைத்துலக விமான நிலையங்கள் தொடர்பான  அரசாங்கத்தின் முந்திய கொள்கைக்கும் தற்போதைய நிலைப்பாட்டுக்கும் இடையில் முரண்பாடு உள்ளது.

மத்தலவை விட பலாலி மிகவும் சிறந்தது என்றும், முதலீடுக்கு ஏற்ப சிறந்த வருவாய் கிடைக்கும் என்ற முடிவுக்கு அரசாங்கம் எப்படி வந்தது?

வடக்கில் ஒரு சர்வதேச விமான நிலையம் இருப்பது எப்போதுமே நல்லது. ஆனால் அது பொது நிதியை வீணாக்குவதை விட வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் ஒரு உண்மையான நோக்கமாக இருக்க வேண்டும்.

மத்தல விமான நிலையம் பெருமளவு நிதியைக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டது.  அந்த திட்டம் வெற்றியளிப்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது.

பலாலியை சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு ஏற்படும் செலவை விட, மத்தல விமான நிலையத்தை சாத்தியப்படுத்துவது செலவு குறைவானதாக இருக்கக் கூடும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments