தமிழக மீனவர்கள் 13 பேர் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள்ள அத்துமீறி தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 13 பேரையும் யாழ்.நீரியல் வளத் திணைக்களத்திடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இரண்டு விசைப் படகுகளுடன் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து நேற்று புதன் கிழமை மாலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்ற கடற்படையினர் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு தடுத்து வைத்திருந்தனர். இந் நிலையில் இன்று வியாழக்கிழமை மாலை யாழிலுள்ள நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் தொடர்பான பதிவுகளை மேற்கொண்டு வருகின்ற நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

No comments