போதையில் பிரபலங்கள்:பேசவேண்டாமென்கிறார் ரணில்!


அமைச்சர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவது தொடர்பில் பொறுப்பாக கருத்து வெளியிட ரணில் கோரிக்கை விடுத்துள்ளார்.ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்கள், இராஜாங்க, பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களுக்குச் சேவையாற்றும்போது, கருத்துக் கூறும்போது, கடுமையான பொறுப்புடன், கருத்துரைக்கவேண்டுமென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கொக்கெயின் போதைப்பொருள் பயன்படுத்துவதாக, நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்த கருத்துகள் தொடர்பில், கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

ஏனைய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தொடர்பில் செயற்படுவதற்கு தனக்கு அதிகாரமில்லையெனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தேவையேற்படின், இரகசியப் பொலிஸாரின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, அரசாங்கம் என்றவகையில் செயற்படமுடியுமெனத் தெரிவித்துள்ளார்.

செயற்குழுவில், மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கருத்துரைத்த இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, “தனக்கு, 7 இலட்சம் விருப்பத்தைக் கொண்டிருப்போர், தன்னுடைய பேஸ்புக்கில் உள்ளனர். ஆகையால், தான் தெரிவித்திருக்கும் கருத்துகள் தொடர்பில், பிரபல்யமான அரசியல் என்றவகையில், கவனஞ் செலுத்துமாறு” கேட்டுக்கொண்டார்.

பிரதமர் மட்டுமன்றி, ஏனைய சிரேஷ்ட உறுப்பினர்களும், கருத்துகளைக் கூறும் போது, பொறுப்புடன் கூறுவது தொடர்பிலான கருத்துகளை முன்வைத்தனர் என அறியமுடிகின்றது. இந்நிலையில், உணர்ச்சிவசப்பட்டு கருத்துரைத்த, இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, செயற்குழுக் கூட்டத்திலிருந்து உடனடியாக வெளியேறுவதற்கு முயற்சித்தாரெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments