துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிக்க கடலில் பாய்ந்த இளைஞர்கள் மாயம்

கிண்ணியா கங்கைப் பாலம், கீரைத் தீவு பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் காணாமல்போயுள்ளனர்.

மண் அகழ்வுப் பணியில் ஈடுபட்டு வந்த மூவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் கிண்ணியாப் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதனால் குறித்த இளைஞர்கள் மூவரும் கடலில் பாய்ந்து மூழ்கியுள்ளனர். இதில் ஒருவர் தப்பித்துள்ளதுடன் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

கடற்படையின் அதிகாரி ஒருவரே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல்போன இரு இளைஞர்களும் கிண்ணியா இடிமன் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவருகிறது.

காணாமல்போனவர்களைத் தேடும் பணியில் பொதுமக்களுடன் சேர்ந்து கடற்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவ இடத்தில் பொலிஸார் உட்பட முப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் மற்றும் அவரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா போன்றோர்கள் உடனடி விஜயம் செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கடற்படை உயர் அதிகாரி, பொலிஸ் உயரிகாரிகளுக்கு காணாமல்போன இளைஞர்களின் சடலங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறும், துப்பாக்கிச்சூடு நடத்திய கடற்படை அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிண்ணியாப் பொலிஸார் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments