சுமந்திரன் வழியில் சுரேன் இராகவன் - பௌத்தத்திற்கு முன்னுரிமை


வடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில் நேற்று நடைபெற்ற புதிய ஆளுநரின் பதவியேற்பு நிகழ்வில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் அந்த விமர்சனங்களை உண்மை ஆக்குவதாக சமூக வலைத்தளங்களில் தற்போது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அண்மையில் புதிய ஆளுநராக சுரேன் ராகவன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டதன் பின்னர் சமூக வலைத்தளங்களில் புதிய ஆளுநர் பௌத்த மதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் எனவும் பௌத்த மதம் சார்ந்த நூல்களை அவர் எழுதியுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் மற்றும் சில இணைய ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் நேற்றுக் காலை புதிய ஆளுநர் தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் சர்வமதத்தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர். அதில் பௌத்த பிக்குகள் இருவரிடம் மட்டும் ஆளுநர் அதிக மரியாதையுடன் நடந்துகொண்டதாகவும் ஆளுநர் அலுவலகத்தில் புத்தர் பெருமானுடைய உருவ சிலைக்கு மட்டும் ஆளுநர் விளக்கேற்றியதாகவும் சமூக வலைத்தளங்களில் தற்போது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே வடமாகாணம் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டம் திட்டமிட்ட பௌத்தமத திணிப்புக்கு சிக்கியிருக்கும் நிலையில் ஆளுநருடைய இத்தகைய செயற்பாடுகள் வட மாகாணத்திற்கு முதலாவதாக தமிழர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டபோது தமிழ் மக்களுக்கு இருந்த எதிர்பார்ப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

No comments