வடமராட்சியில் சுமந்திரனின் கட்டவுட் மீது சாயப் பூச்சு

வடமராட்சி பகுதியில் அரச அபிவிருத்தித் திட்டத்துக்கு வைக்கப்பட்டு இருந்த பதாகையில் காணப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் , ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரனின் படத்திற்கு நிறப்பூச்சு (பெயின்ட்) பூசப்பட்டு உள்ளது.

வடமராட்சி பகுதியில் “கம்பெரலிய அபிவிருத்தி யுத்தம் ” எனும் தொனிப்பொருளின் ஊடாக வடமராட்சி கொட்டடி சித்தி விநாயகர் ஆலய கேணி மற்றும் பருத்தித்துறை நீதிமன்ற வீதி ஆகியன சீரமைப்பு செய்யப்பட்டன.
சீரமைப்பு செய்யப்பட்ட கேணி மற்றும் வீதி ஆகியன மக்கள் மயப்படுத்தப்பட்ட பின்னர் அது குறித்த பதாகைகள் அருகில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்தப் பதாகையினை கடந்த புதன் கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம் . ஏ.சுமந்திரன் திரைநீக்கம் செய்து வைத்தார்.
அந்தப் பதாகையில் ஜனாதிபதி , பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் ஆகியோரின் படங்களும் காணப்பட்டன.

அதில் நேற்றைய தினம் இரவு இனம் தெரியாத நபர்கள் நாடாளுமன்ற உறுப்பினரின் படத்தின் மீது வர்ண பூச்சு (பெயின்ட்) பூசி அவரது படத்தினை மறைத்துள்ளார்கள்.
இந்தப் பதாகையில் எம்.ஏ சுமந்திரனின் படம் காணப்பட்டமை சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை, “கம்பெரலிய அபிவிருத்தி யுத்தம் ” எனும் தொனிப்பொருளின் முன்னெடுக்கப்படும் கிராம மட்ட அபிவிருத்திப் பணிகள் நாடு முழுவதும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்படுகின்றன. அதனால் அந்தத் திட்டத்தை முன்மொழிந்த நாடாளுமன்ற உறுப்பினரே அந்தத் திட்டத்தை மக்களிடம் கையளிப்பதுடன் அவரது ஒளிப்படம் பதாகையில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் யாழ்ப்பாணத்தில் இந்த நடைமுறை புதிது என்பதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தியாளர்கள் அதனை விமர்சனத்துக்குட்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments