பிரான்சில் ஆங்காங்கே தொடரும் மஞ்சள் சட்டைப் போராட்டம்!

பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல் விலை சமீப காலமாக உயர்த்தப்பட்டு வந்தது. ஒரு லிட்டருக்கு 1.24 யூரோ பணம் முதல் 1.53 யூரோ வரை உயர்ந்துள்ளது. அதாவது கடந்த ஒரு ஆண்டில் 23 சதவீதம் வரை உயர்த்தப்பட்டிருக்கிறது.

இதை எதிர்த்து கடந்த 3 வாரமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் ஆங்காங்கே வன்முறையில் ஈடுபட்டனர்.

இதனால் பிரான்ஸ் நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு தொடர்ந்து கலவரம் நடந்து வந்தது. எனவே பெட்ரோல் விலை உயர்த்தியதை 6 மாதத்திற்கு நிறுத்தி வைக்க முடிவு செய்தது. இதனால் போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்தனர். ஆனாலும் போராட்டம் தொடர்ந்தது.

மஞ்சள் சட்டை அணிந்து போராட்டக்காரர்கள் இதில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டு வந்தனர். எனவே இதற்கு மஞ்சள் ஜாக்கெட் போராட்டம் என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள்.

இதனால் பிரான்சில் மிகப்பெரிய கலவரம் ஏற்படலாம் என்ற அச்சம் உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக பிரான்ஸ் முழுவதும் பல்லாயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

தலைநகரம் பாரீசில் மட்டும் 8 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இவர்களுடன் ராணுவத்தினரும் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். ஆங்காங்கே ராணுவ வாகனம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தலைநகர் பாரீசில் சுமார் 1500க்கு மேற்பட்ட போராட்டக்காரர்கள் இன்று ஒன்றுதிரண்டனர். அவர்கள் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இதனால் அவர்களை அங்கிருந்து கலைக்க போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். போராட்டக்காரர்கள் 127 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், பிரான்ஸ் முழுவதும் போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

பிரான்சில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் இன்று மூடப்பட்டுள்ள நிலையிலும், அங்கு பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

#Yellow Vests #Yellow Jackets

No comments