ரணிலுக்கு ஆதரவு ? கூட்டமைப்புக்குள் குழப்பம் !

ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்குமாறு நாடாளுமன்றத்தில்  ஐக்கிய தேசியக் கட்சி கொண்டு வரவுள்ள  நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவு அளிப்பதா என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் முடிவு எதையும் எடுக்கவில்லை என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

நாளை மறுநாள் நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி இந்தப் பிரேரணையைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.

இந்தப் பிரேரணை தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிட்டுள்ள மாவை சேனாதிராசா,

‘கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்திலேயே, எவ்வாறு வாக்களிப்பது என்று முடிவு செய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

ரணிலுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கக்கூடாது என ரெலோ அறிவிப்பு விடுத்ததோடு ரணிலுக்கு ஆதரவளிக்க 5 முக்கிய நிபந்தனைகளை விடுத்துள்ள நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முடிவெடுக்க முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் ரெலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மத்திய குழுவைகூட்டுமாறு அழைப்புவிடுத்த நிலையிலேயே கடந்த வாரம் இரு கூட்டங்கள் நடைபெற்றன. எனினும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதற்கு தமிழரசுக் கட்சி உறுதியாக வாதாடிவருகின்ற அதேவேளை ரெலோ கடுமையாக எதிர்த்துவருகிறது.

இந்நிலையிலேயே இன்றும் மத்தியகுழு கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜேவிபியின் முடிவு

அதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதில்லை என்று ஜேவிபி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் ஜெயதிஸ்ஸ,

“நாங்கள் நிச்சயமாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களிக்கமாட்டோம்.

அதேவேளை, வாக்கெடுப்பில் பங்கேற்று எதிர்த்து வாக்களிப்பதா அல்லது வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விடுவதா என்று இன்னமும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

நிபந்தனையற்ற ஆதரவு

அதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கப் போவதாக அந்தக் கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமது கட்சி, ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிடடுள்ளார்.

No comments