வடக்கில் கடும் மழை - வெள்ளத்தில் மூழ்கின கிராமங்கள்




வடக்கு மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்துவரும் அடை மழையில் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. கடும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி, முல்லைத்தீவு. வடமராட்சி கிழக்குப் பகுதிகளில் வெள்ளத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.

கிளிநொ்சசியில் வழமைக்கு மாறாக 225 தொடக்கம் 370 மில்லி மீற்றர் வரை மழை பெய்துள்ளது. இதனால் பல இடங்களிலும் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் வான் பாய்கின்றமையினால் வீதி போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு மக்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

சில கிராமங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில், இராணுவத்தினர் படகுகள் மூலம் மீட்கும் பணியில் ஈடுப்பட்டனர்.

இரணைமடு குளத்தின் நீர் மட்டம் 38 அடியாக உயர்ந்துள்ளதோடு அனைத்து வான் கதவுகளும் முழுமையாக திறக்கப்பட்டுள்ளன. அத்தோடு மூன்றடிக்கு வானும் பாய்கிறது. இரணைமடுக் குளத்தின் நீர் கொள்ளளவு உயரம் 36 அடி என்பது குறிப்பிடத்தக்கது.

No comments