பொதுஜன பெரமுனவில் சேரவில்லை - விண்ணப்பித்தேன் என்கிறார் மகிந்த

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை தான் பெற்றுக் கொள்ளவில்லை என்று, சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்கள வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன முன்னணியில் உறுப்புரிமை அட்டையை ஏற்றுக்கொண்டதாக, வெளியாகிய படம், தொடர்பான கேள்விக்குப் பதிலளித்துள்ள மகிந்த ராஜபக்ச,

“அது உறுப்பினர் அட்டையைப் பெற்றுக் கொள்வது தொடர்பானது அல்ல. பொதுஜன முன்னணியில் இணைந்து கொள்ளும் விண்ணப்பத்தை சமர்ப்பித்த போது எடுக்கப்பட்டது.

அந்த அட்டையில் எனது பெயர் அச்சிடப்படவில்லை என்பதால், நான் வைத்திருக்கும் ஆவணம் உறுப்பினர் அட்டை அல்ல.

உறுப்புரிமைக்கு விண்ணப்பித்தல், மற்றும் உறுப்புரிமை வழங்குதல் என்பன இருவேறு விடயங்களாகும்.

நான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆயுள்கால உறுப்பினர். கட்சியின் மூத்த ஆலோசகராக இருக்கிறேன். மூத்த ஆலோசகர்கள் பக்கம் மாறமாட்டார்கள். அவர்களுக்கு ஓய்வு இல்லை.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments