பிரதமர் பதவியை நீடிக்கச்செய்யும் மகிந்தவின் மேன்முறையீடு நிராகரிப்பு

பிரதமர் பதவியில் மஹிந்த ராஜபக்‌ஷ நீடிப்பதற்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையுத்தரவை நீடித்து, உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக ஏனையவர்களும், தங்களுடைய அந்தப் பதவிநிலைகளை வகிப்பதை நிறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவுக்கு எதிராக, மஹிந்த தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனைகள், உயர் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்ற நிலையில், நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவனேக அலுவிகார மற்றும் விஜித மலல்கொட ஆகிய நீதியரசர்கள் குழு, இடைக்காலத் தடையுத்தரவை நீக்குமாறு மஹிந்த குழுவினர் விடுத்திருந்த கோரிக்கையை நிராகரித்தனர்.

அத்துடன், மஹிந்த தரப்பினர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானித்த நீதியரசர்கள் குழு, எதிர்வரும் ஜனவரி மாதம் 16, 17 மற்றும் 18ஆம் திகதிகளில், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக, விசாரணைக்குத் திகதி குறித்தது.

No comments