ஜக்கிய தேசியக்கட்சியும் கூட்டமைப்பும் ஒன்றே?


ஐக்கிய தேசிய கட்சியின் கருத்துக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனே தலைமை வகித்ததாக ஆளும் தரப்பைச் சேர்ந்த விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு தீர்வை காணும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற கூட்டம் இணக்கப்பாடுகள் எதுவும் இன்றி நிறைவடைந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் தமக்கே பெரும்பான்மை உள்ளதாக ரணில் தரப்பினரும் நாடாளுமன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என மஹிந்த தரப்பினரும் பரஸ்பரம் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
ஸ்ரீலங்கா நாடாளுமன்ற அமர்வுகளை அமைதியான முறையில் முன்னெடுத்து செல்வதை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனநேற்று சர்வ கட்சி சந்திப்பொன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை 5 மணியளவில் ஆரம்பமான இந்த சந்திப்பில் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நல்லாட்சி அரசாங்க அமைச்சரான லக்ஷ்மன் கிரியெல்ல தமது தரப்புக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது என்பதை இதன்போது எடுத்துக் கூறியதாக குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்க மக்கள் ஆணை வழங்கவில்லை எனக் குறிப்பிட்ட லக்ஷ்மன் கிரியலெ்ல புதிய பிரதமர் நியமிக்கப்பட்டால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என சுட்டிக்காட்டியதாக குறிப்பிட்டார்.
நாளைய தினம் (19) பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் வருகைதந்து அதனை நிரூபித்துக் காட்டுவதாக ஜனாதிபதியிடம் தமது தரப்பு கூறியதாக மற்றுமொரு ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா தெரிவித்தார்.
எனினும் இந்த விடயத்தை தாம் தெரிவிக்கும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முகம் வெறிச் சோடிக் காணப்பட்டதாகவும் அஜித் பீ பெரேரா மேலும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைய நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்து அது தொடர்பில் விவாதித்து வாக்கெடுப்பை நடத்த முடியும் என தாம் கூறியதாக ஆளும் தரப்பு அமைச்சரான விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.
அந்த நடைமுறைக்கு வரும் பட்சத்தில் அதனை ஏற்பதற்கு தாம் தயாராக உள்ளதாகவும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் வலுக்கட்டாயமாக சபாநாயகர் தமக்கு இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்தி செய்ய முயற்சிப்பார் ஆயின் அதனை ஒருபோதும் ஏற்க தயாரில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் கருத்துக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனே தலைமை வகித்ததாக ஆளும் தரப்பைச் சேர்ந்த விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டினார்.
அத்துடன் தமக்குள்ள பெரும்பான்மையை நேரடியாக நிரூபிப்பதாக அஜித் பீ பெரேரா கூறியமை குறித்து பதில் அளித்த விமல் வீரவன்ச அதற்கான நேரத்தை ஜனாதிபதி வழங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்

No comments