கடைசியை முயற்சியையும் நிராகரித்த மைத்திரி!


கொழும்பு அரசியல் குழப்பத்தினை தீர்க்க கடைசியாக முன்னெடுக்கப்பட்ட சமரச முயற்சியையும் மைத்திரி நிராகரித்திருந்ததாக மனோகணேசன் அம்பலப்படுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தடாலடியாக பிரதமர் பதவி நீக்கம் செய்யப்பட்ட 26ம் திகதி முதல் உருவாகி இருந்த அரசியல் நெருக்கடியை தீர்க்கும் முகமாக, சில முயற்சிகள் நேற்று எடுக்கப்பட்டன.
ரணில் மீண்டும் பிரதமர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டால், அதை எக்காரணம் கொண்டும் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என மைத்திரி அடம் பிடித்தார். அது ஜனநாயக விரோதம் என்றாலும், மைத்திரி ஜனாதிபதி பதவியில் இருப்பதால், அவரை ஏதாவது ஒரு முறையில் அனுசரிக்க வேண்டிய கட்டாயம் எமக்கு ஏற்பட்டது.

14 ம் திகதி பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய முன்னணி வாக்கெடுப்பில் வெற்றி பெறும்பட்சத்தில், புதிய பிரதமராக பதவியில் நியமிக்கப்பட போகின்றவர் யார் என்பது தொடர்பில் உரையாடுவோம் என்று நேற்று காலை அவரிடம் சொல்லப்பட்டது. அதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்களுடனும் பேசப்பட்டது. அவர்களும் இணங்கினர்.

அவசியமானால், நெருக்கடியை தவிர்க்க வேறு ஒருவரை பிரதமராக நியமிக்க ஆலோசிப்போம் என்று ஐதேக முக்கியஸ்தர்கள் இணங்கினர். ஐதேமு பங்காளி கட்சிகளுடன் மைத்திரி பேசியுள்ளார். ஆனால், ஐதேகவுடன் பேசி இருக்கவில்லை. ஆகவே எங்களிடமும் பேசினால், சிக்கலை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் இது தொடர்பில் ஆராயலாம் என அந்த ஐதேக முக்கியஸ்தர்கள் கூறினார்கள்.

இதையடுத்து, இது விடயமாக நேற்று இரவு மைத்திரியின் சகோதரர், ஐதேமு முக்கியஸ்தர்கள் இருவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த பேச்சுகள் நடந்து கொண்டிருந்த போதே, ஜனாதிபதி மைத்திரிக்கு பிழையான ஆலோசனை கொடுக்கப்பட்டது. அதையடுத்து அவர் பாராளுமன்றத்தை கலைக்கும் ஆணையில் கையொப்பமிட்டார்.

ஜனாதிபதியின் ஆணையின்படி பாராளுமன்றம் 14ம் திகதியே கூட்டப்பட இருந்தது. நேற்று 9ம் திகதி என்றபடியால், 14ம் திகதிவரை இன்னமும் 5 நாட்கள் இருந்தன. ஆகவே இன்னமும் 5 நாட்கள் இருந்தபடியால், அது கடைசியாக எடுக்கப்பட்ட முயற்சியே தவிர, கடைசி நேர முயற்சி அல்ல. ஆகவே கடைசியாக எடுக்கப்பட்ட பேச்சும் முடிவுக்கு வந்ததென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments