உச்சநீதிமன்றத்தின் கருத்தை அறியாமல் தேர்தல் முடிவில்லை - மகிந்த தேசப்பிரிய


உச்சநீதிமன்றத்தின்  கருத்தை அறியாமல், தேர்தல்கள் ஆணைக்குழு, நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்த முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்குத் தகவல் வெளியிட்டுள்ளதாக, ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய தகவல் வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தின் கருத்தை நாடுவீர்களா என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவிடம் இந்திய ஊடகம் ஒன்று நேற்றிரவு கேள்வி எழுப்பிய போது, அது குறித்து கருத்து வெளியிட மறுத்துள்ளார்.

எனினும், அவர் “தேர்தலுக்கான நாளைக் குறிக்கும் அதிகாரத்தை சிறிலங்கா ஜனாதிபதி  கொண்டிருக்கிறார். தேர்தலை நடத்துவது குறித்த நிலைப்பாடு தொடர்பாக, ஆணைக்குழு கலந்துரையாடும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நேற்றிரவு கருத்து வெளியிட்டிருந்த தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய,

“நாடாளுமன்ற கலைப்பு குறித்த அரசிதழ் வெளியானதும், தேர்தல்கள் ஆணைக்குழுவைக் கூட்ட வேண்டும்.

நாங்கள்   தீயணைப்பு படைப்பிரிவு போல, எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும்.” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments