கொழும்பிலிருந்து அவசர உத்தரவு: புதைகுழி அகழ்வு நிறுத்தம்!


கொழும்பிலிருந்து கிடைக்கப்பெற்ற அவசர உத்தரவொன்றையடுத்து  மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது நேற்று (12) எவ்வித அறிவித்தல்களும் இன்றி இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை 104 ஆவது தடவையாக இடம்பெற்ற அகழ்வு பணியானது கடந்த சனிக்கிழமை (10) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (11) ஆகிய விடுமுறை தினங்களைத் தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை (12) காலை மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
எனினும் நேற்று (12) அகழ்வு பணிகள் இடம்பெறவில்லை.
அத்துடன் எதிர்வரும் இரு வார காலங்களுக்கு குறித்த அகழ்வுப் பணியானது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது தொடர்சியாக மாவட்ட நீதவான்  ரி.சரவணராஜாவின் மேற்பார்வையிலும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையிலும் இடம்பெற்று வருகின்றது.
இதுவரை இடம்பெற்ற மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகளின் போது, 
232 க்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 224 மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு பொதி செய்யப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
மேலும் அடையாளப்படுத்தப்பட்டு இன்னமும் அப்புறப்படுத்தப்படாத மேலதிக மனித எலும்புக்கூடுகளை அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது.
இந்த நிலையில் முன் அறிவித்தல் இன்றி; எதிர்வரும் இரு வாராங்களுக்கு திடீர் என அகழ்வு பணியானது இடை நிறுத்தப்பட்டுள்ளது.

No comments