யாழில் துணைதூதரகங்கள்:முட்டுக்கட்டை போடும் இலங்கை!


யாழ்ப்பாணக் குடாநாட்டில்,சர்வதேச நாடுகளது துணைதூதரகங்களை அமைக்க கோரம் தமிழ் தரப்புக்களது முயற்சியை இலங்கை அரசு திட்டமிட்டு தடுத்துவருவதாக சந்தேகிக்கப்படுகின்றது.அவ்வகையில்  கனேடியத் துணை உயர்ஸ்தானிகராலயம் ஒன்றை ஆரம்பிக்குமாறு, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நீண்டகாலமாக விடுத்துவந்த கோரிக்கையை, கனேடிய உயர்ஸ்தானிகராலயம் நிராகரித்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 3 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், கனடாவில் வசித்து வருகின்றனர். அவர்களது நன்மை கருதியும் வடக்கு மாகாணத்தில் வாழும் அவர்களது உறவுகளின் நன்மை கருதியும், யாழ்ப்பாணத்தில் கனேடியத் துணை உயர்ஸ்தானிகராலயம் ஒன்றை அமைக்க வேண்டுமென, முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நீண்டகாலமாக எழுத்துமூலம் கோரிக்கை விடுத்து வந்தார். 

இதையடுத்து, இந்த விடயம் தொடர்பில் கனேடிய  உயர்ஸ்தானிகராலயத்தால் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இந்நிலையில், இது தொடர்பில் அறிந்த அரச ஆதரவு தரப்பை சேர்ந்த சிலர், கனேடிய உயர்ஸ்தானிகராலயத்துக்கு தவறான புள்ளிவிவரத்தை வழங்கியுள்ளதாகவும் அதாவது, வடக்கு மாகாண மக்களில் 1 இலட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே, கனடாவில் வாழ்வதாக, அவர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில், தற்போது இந்தியத் துணை உயர்ஸ்தானிகராலயம் உள்ளதைப் போன்று, கனடா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளுக்கான துணை  உயர்ஸ்தானிகராலயங்களும்  சுவிட்ஸர்லாந்து நாட்டுக்கான துணைத் தூதரகமும் அமையப்பெற்றால், அந்த நாடுகளில் வாழும் வடக்கு மாகாண மக்களுக்கும் வடக்கில் வாழும் அவர்களது உறவுகளுக்கும், நெருங்கிய உறவைப் பேணமுடியுமென, முன்னாள் முதலமைச்சரால் வலியுறுத்தப்பட்டது. 

இருப்பினும், கனேடியத் துணை உயர்ஸ்தானிகராலயம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைக்கப்போவது இல்லையென, கனேடிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

தற்போது தாயகம் திரும்பும் பெருமளவிலான புலம்பெயர் தமிழ் மக்கள் தமது தேவைகளிற்கு கொழும்பு செல்வது இதனால் தடைப்படுமென அரசு கருதுகின்றது.அத்துடன் இதனால் நேரடியாக தமிழர் தாயகத்துடன் உறவு ஏற்படுவதை தடுக்கவே அவ்வாறு துணை தூதரகங்கள் அமைவதை தடுப்பதாக சொல்லப்படுகின்றது.

No comments