மகிந்த தீர்வு தருவாரா ? நாமலிடம் கேட்ட சிறிதரன் !


“ உங்கள் தந்தை ஆட்சிக்கு வந்தால், இணைந்த வடக்கு, கிழக்கில் அரசியல் தீர்வை வழங்கத் தயாரா? தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் என்ற உத்தரவாதத்தை வழங்க முடியுமா” – இவ்வாறு நாமல் ராஜபக்ச எம்.பியிடம் நேரில் கேள்வி எழுப்பினார் சிறிதரன் எம்.பி.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது. தினப்பணிகள் முடிவடைந்தப்பின்னர் சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதம் ஆரம்பமானது.

இதில் உரையாற்றிய சிறிதரன் எம்.பி, உணவுதவிர்ப்பு போராட்டத்தில் இறங்கியுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பேசினார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய நாமல் ராஜபக்ச எம்.பி,
“ தமிழ் மக்களுக்கு 2015 இல் வழங்கிய வாக்குறுதியை இந்த அரசு மீறிவிட்டது.

கூட்டமைப்பும் அதை நிறைவேற்ற பாடுபடவில்லை. எமது ஆட்சியில் முன்னாள் போராளிகளை புனர்வாழ்வளித்து விடுதலை செய்தோம்” என்றார்.

இதற்கு பதிலளித்த சிறிதரன், “ நாங்கள் எதிர்க்கட்சி எம்.பிக்கள். இக்கேள்வியை நீங்கள் அரசிடம்தான் கேட்கவேண்டும்.

ஆட்சிக்குவரும்வரைதான் எல்லாம். நீங்கள் சிறைக்கு சென்ற பிறகுதான், கைதிகளின் வேதனை புரிந்துள்ளது. நீங்கள் உண்மையாகவே அக்கறையுள்ள நபர் எனில், உங்கள் தந்தை ஆட்சிக்கு வந்த பிறகு இணைந்த வடக்க, கிழக்கில் தீர்வை வழங்குவார் என்று உறுதியளிக்கமுடியமா? காணாமல்போனோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் விவகாரத்துக்கு தீர்வுகளை காணமுடியுமா?” என்று கேட்டார்.

இதற்கு நாமல் பதிலளிக்க எழுந்தபோதும், சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினர் அதற்கான வாய்ப்பை மறுத்துவிட்டார்.

No comments