ஆவாக்களைத் தேடி 300 பொலிஸ் - 21 வீடுகளில் நேற்று சோதனை


யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாள்வெட்டுகள் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும், ஆவா குழுவினரைக் கைது செய்வதற்கான சிறப்பு நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பான காவல்துறை மூத்த அதிகாரியான பிரதி காவல்துறை மா அதிபர் ரொஷான் பெர்னான்டோ  தெரிவித்துள்ளார்.

”அதிகளவு குழு மோதல்கள் நிகழும் பகுதிகளான இணுவில் மற்றும் கொக்குவில் பகுதிகளை உள்ளடக்கியதாக, கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் காவல்துறைப் பிரிவுகளில் இந்த சிறப்புத் தேடுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய சுற்றிவளைப்புத் தேடுதல்களின் போது, ஆவா குழுவினரின் மறைவிடங்கள் என்று சந்தேகிக்கப்பட்ட, 21 வீடுகளில் தேடுதல்கள் நடத்தப்பட்டன. இதன் போது ஆவா குழுவினருடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சிறப்பு தேடுதல் நடவடிக்கையில், 300 சிறிலங்கா காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் பணியாற்றும், 200 காவல்துறையினரும், முல்லைத்தீவில் இருந்து அழைக்கப்பட்ட 50 காவல்துறையினரும், கிளிநொச்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட 50 காவல்துறையினரும் இந்த தேடுதலில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இவர்கள் தவிர புலனாய்வுப் பிரிவினரும் தேடுதல்களில் ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.



இந்த தேடுதல் நடவடிக்கையின் ஒரு கட்டமாக, நேற்றுக்காலை 6 மணி தொடக்கம், 11 மணி வரை வாகனங்கள், குறிப்பாக, உந்துருளிகள் சோதனையிடப்பட்டு, 81 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

குழு மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இந்த காவல்துறை நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

சாதாரண மக்களின் வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களை குறிவைத்தே இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

சாதாரண மக்களின் வாழ்வை குழப்பாதபடி காவல்துறையின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முதலில் ஆவா குழுவினர் தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் திரட்டப்பட்டு, ஆவா குழு மற்றும் ஏனைய குழுவினரின் தங்குமிடங்கள், மற்றும் நடமாடும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்ட பின்னரே, இந்த தேடுதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments