போதைப்பொருள் வியாபாரம் - சுன்னாகம் பொலிஸாருக்கு விளக்கமறியல்


ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் போதைப்பொருள் கடத்தல்காரருக்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினனோ துணையாக இருப்பதாக சுமத்திவந்த குற்றச்சாட்டு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

தனது மகன் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுடன் அடிக்கடி தொடர்புகொள்வதாகவும் அவர் போதைப்பொருள் வியாகாரிகளுடன் பொம்மைவெளிப் பகுதியில் நடமாடுகின்றார் என்றும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் தாயார் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், பொம்மைவெளிப் பகுதியில் வைத்துச் சந்தேகநபர் கடந்த செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து 200 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது.

சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் கான்ஸ்டபிளாகக் கடமையாற்றுகின்றார்.

விசாரணைகளின் பின் அவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கடந்த புதன்கிழமை முற்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.

No comments