சுருக்கு வலை தடை:இன்றும் அமைச்சர் உத்தரவு!


வடக்கில் முன்னெடுக்கப்படும் தடை செய்யப்பட்ட சுருக்குவலை முறைமையினை உடனடியாக தடுத்து நிறுத்த இலங்கை கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.இன்று வடமாகாண மீனவ சம்மேளனப்பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் அமைச்சர் குறித்த உத்தரவை பிறப்பித்ததாக சம்மேளன தலைவர் வே.தவச்செல்வம் அறிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட சுருக்குவலையால் உள்ளுர் மீனவர்களிடையே மோதல்கள் தோன்றியுள்ள நிலையிலேயே இன்றைய சந்திப்பு கொழும்பில் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றிருந்தது.

இதனிடையே முல்லைத்தீவு மாவட்டத்தில் பணிபுரியும் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் மூவரையும் ஒக்ரோபர் முதலாம் திகதிமுதல் இடம்மாற்றம் செய்வதாக பணிப்பாளர் நாயகம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. சாந்தி சிறீஸ்காந்தராயா குற்றஞ்சுமத்தியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சுருக்குவலைக்கு முற்றாகத் தடைவிதிக்குமாறும் மாவட்டத்தில் பணியாற்றும் சர்ச்சைக்குரிய 3 உத்தியோகத்தர்களையும் உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் வஜித அபயவர்த்தனா எமது முன்னிலையில் பணிப்பாளர் நாயகத்திற்கு கடந்த செப்ரெம்பர் மாதம் 19ம் திகதி மாவட்ட மீனவ அமைப்புக்கள் முன்பாக உத்தரவிட்டார்.

இச் சந்திப்பில. முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் பேதுருப்பிள்ளை - பேரின்பநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான , சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்த நிலையிலேயே மாவட்ட மீனவர் சங்கப் பிரதிநிதிகளிற்கும் மீன்பிடி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் மற்றும் அமைச்சருடன் தனித்தனியே சந்திப்புக்கள் இடம்பெற்றன.

அதிகாரிகளை மாற்றுவதுடன் சுருக்குவலையை தடை செய்ய வேண்டும் போன்ற இரு கோருக்கைகளுடன் மாவட்டத்தின் பிரதிநிதிகள் இச் சந்திப்பில் கலந்துகொண்டனர். குறித்த சந்திப்பிற்கு கூட்டமைப்பின் தலைவர் ஏற்பாடு செய்து தந்திருந்தார். இதன் பிரகாரம் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஆகியோரை இரு நாட்களாக நேரில் சந்தித்து நிலமையை விளக்கி கூறப்பட்டது. இதில் ஊழியர்களை மாற்றுவதாக பணிப்பாளர் நாயகம் அதனை ஒக்ரோபர் முதலாம் திகதி நடைமுறைப்படுத்துவதாகவும் வாக்குறுதியளித்திருந்தார்.

இதேபோல் உடனடியாக மாவட்டத்தில் வழங்கியுள்ள சுருக்குவலை அனுமதிகள் அனைத்தையும் இரத்துச் செய்யுமாறு அமைச்சர் உத்தரவிட்டார். இவற்றின் அடிப்படையில் சுருக்குவலை அனுமதிகளை தடைசெய்து உத்தரவு மாவட்டத்திற்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்றுவரை மீனவ சங்கங்களுடன் முரண்பாடாக உள்ள மூவரையும் மாவட்டத்தை விட்டு இடமாற்றம் செய்யும் உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. 

இந்நிலையில் மீண்டும் சுருக்குவலை தடைக்கான உத்தரவு அமைச்சரால் பிறப்பிடக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உத்தரவுகளை பிறப்பிக்கின்ற போதும் அவை வெறும் வாய்மொழி உத்தரவே என சொல்லி அதிகாரிகள் நிறைவேற்ற பின்னடிப்பதாக சொல்லப்படுகின்றது. 

No comments