திருகோணமலையில் பெண் கிராம சேவகரை அச்சுறுத்தியதைக் கண்டித்து நடத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம்!

திருகோணமலையில் பெண் கிராம சேவகரை அச்சுறுத்தியதை  கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இக்கவனயீர்ப்புப் போராட்டம் இன்று திருகோணமலைப் பிரதேச செயலகத்திற்கு முன்னால் நடத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட பெண்கள் அமையம், திருகோணமலை சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் இராவண சேனை அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த 31ஆம் திகதி ஜமாலியா கிராம சேவகர் பிரிவில் முருகாபுரி கிராம சேவையாளர் அலுவலகத்தில் இருந்த வேளை சிலர் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து கிராம சேவகரை பயமுறுத்தியதை கண்டித்தே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேர் அடையாளம் காட்டப்பட்டும் ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டு ஒரு நாளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக போராட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மக்களுக்கு சேவையை வழங்கும் அரச சேவையாளர்களுக்கு பாதுகாப்பில்லை, நிவாரணம் இல்லை மாறாக குற்றவாளிகள் சட்டத்தால் பாதுகாக்கப்படுகின்றனர், இங்கு குற்றவாளிகள் பாதுகாக்கப்படுவதால் அநியாயங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.








No comments