நாட்டைவிட்டு தப்பி ஓடிய பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி


வெளிநாட்டுக்குப் புறப்பட்டுச் சென்ற பின்னரே,  தனது அதிகாரபூர்வ பயணம் தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு, குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கோட்டே நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், நேற்றுக்காலை 10 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்பாக, வாக்குமூலம் அளிக்க வருமாறு அட்மிரல் விஜேகுணரத்னவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், நேற்று அதிகாலை 3.30 மணியளவில் அவர் கட்டார் விமான சேவை மூலம், மெக்சிகோவுக்கு புறப்பட்டுச் சென்றிருந்தார். வரும் 19ஆம் நாளே அவர் நாடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

சிறிலங்கா அரசின் பிரதிநிதியாக மெக்சிகோவின் தேசிய நாள் நிகழ்வுகளில் அட்மிரல் விஜேகுணரத்ன பங்கேற்கவுள்ளார்.

இந்தப் பயணம் குறித்து, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மாற்று நாள் ஒன்றை தருமாறு கேட்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியின் பேச்சாளர் கூறியிருந்தார்.

ஆனால், அட்மிரல் விஜேகுணரத்ன நேற்று அதிகாலையே வெளிநாட்டுக்குப் புறப்பட்டுச் சென்று விட்டார் என்றும், அதன் பின்னர் நேற்றுக் காலையே அதுபற்றி தமக்கு தெரியப்படுத்தப்பட்டது என்றும் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரி கூறியுள்ளார்.

No comments