பட்டப்பகலிலும் வருகின்றது வாள் வெட்டுக்குழு?


யாழ்.குடாநாட்டில் சட்டம் ஒழுங்கு மேம்பட்டுவருவதாக காவல்துறை பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்ற நிலையில் வலிகாமம் பகுதியின் குப்பிளான் பிரதேசம் நாள் தோறும் களவு,கொள்ளை,வாள்வெட்டுக்களால் அதிர்ந்தவண்ணமுள்ளது.நேற்றைய தினம் குப்பிளான் வடக்கு வீரபத்திரர் ஆலயத்திற்கு அண்மையில் பட்டப்பகல் வேளையில் வாள்வெட்டுக் கும்பல் ஒன்று  வீடு புகுந்து தீக்கிரையாக்கியுள்ளதுடன் கொள்ளையிலும் ஈடுபட்டுள்ளது.

நேற்றுப் பிற்பகல்(05) தமது முகங்களைக் கறுப்புத் துணிகளால் மறைத்துக் கொண்டு நான்கு மோட்டார்ச் சைக்கிள்களில் வாள்கள் மற்றும் கைக்கோடரிகளுடன் வந்த எட்டுப் பேர் கொண்ட வாள்வெட்டுக் கும்பல் அத்துமீறி வீட்டுக்குள் உள்நுழைந்துள்ளது.

இதனைச் சற்றும் எதிர்பாராத வீட்டிலிருந்தவர்கள்; பதறியடித்தபடி அங்கிருந்து சிதறியோடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் வீட்டிலிருந்த கற்றல் மேசை, கட்டில் என்பவற்றைப் பெற்றோல் ஊற்றிக் கொளுத்திய குறித்த வாள்வெட்டுக் கும்பல் வீட்டிலிருந்த தொலைக்காட்சி உட்படப் பல்வேறு பெறுமதியான பொருட்களையும் அடித்துச் சேதப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் வீட்டிலுள்ள முன்பக்கக் கண்ணாடி யன்னல்களையும்,பக்கக் கண்ணாடி யன்னல்களையும் அடித்து நொறுக்கிய குறித்த வாள்வெட்டுக் கும்பல் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மோட்டார்ச் சைக்கிள்களையும் அடித்து நொறுக்கி அவற்றிற்குத் தீ வைத்துள்ளனர்.

அத்துடன் வீட்டிற்கு வெளியே நின்றிருந்த இளைஞனைத் துரத்திச் சென்ற வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த ஒருவன் வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்த முற்பட்டுள்ள போதிலும் இளைஞன் அவர்களிடமிருந்து தெய்வாதீனமாகத் தப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வாள்வெட்டுக் கும்பல் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலட்சம் ரூபா பணம் மற்றும் தங்கச் சங்கிலியையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் வாள்வெட்டுக் கும்பலின் அட்டகாசத்தால் பல இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களும் நாசமாகியுள்ளது.

குறித்த வாள்வெட்டுக் கும்பல் வெளியிடத்திலிருந்து வந்து குப்பிளான் தெற்கில் அமைந்துள்ள சுடலையொன்றுக்குள் தம்மைத் தயார்படுத்திக் கொண்டு வந்துள்ளதை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அவதானித்துள்ளனர்.

குறித்த வாள்வெட்டுக் கும்பல் குப்பிளான் பகுதியிலுள்ள வீதிகளால் பயணித்த போது வீதியால் சென்ற மக்களையும் ,தனியார் கல்வி நிலையத்தில் நின்றிருந்த மாணவர்களையும் தாம் கொண்டு வந்த வாள்களைக் காட்டிக் கடுமையாக அச்சுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வாள்வெட்டுக் கும்பல் குறித்த பகுதியிலிருந்து தப்பிச்சென்ற சில நிமிடங்களுக்குள் சுன்னாகம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

குறித்த வாள்வெட்டுக் கும்பல் குப்பிளான் சந்தியால் பயணம் செய்தமைக்கான சி.சி.ரி.விக் காணொளி ஆதாரங்கள் சிக்கியுள்ள நிலையில் இதனை அடிப்படையாகக் கொண்டு சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற போது வீட்டின் குடும்பத்தலைவர்களான கணவனும், மனைவியும் வெளியே சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments