பொலிஸ்மா அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை


நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என கேட்டுகொண்டுள்ள ஒன்றிணைந்த எதிரணி, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டுவர உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

புஞ்சி பொரளையில் உள்ள என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அந்த அணியின் தலைவர் தினேஸ் குணவர்தன எம்.பி, மஹிந்த யாப்பா அபேவர்தன எம்.பி, முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரன ​ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினரையும் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள சூழ்ச்சிகளும் தற்போது அம்பலமாகியுள்ளதாக இதன்போது தெரிவித்த தினேஸ் குணவர்தன எம்.பி இது மிகவும் ஆப்பாத்தான ஒன்று எனவும் எடுத்துரைத்தார்.

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாது நாட்டு மக்களின் வாக்குரிமையை பறித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  ஐக்கிய நாடுகளின் 73ஆவது பொதுச் சபை அமர்வுகளில் கலந்துகொண்டு, இலங்கையில் ஜனநாயகம் இருப்பதாக எடுத்துரைத்திருப்பது வேடிக்கையான ஒன்று என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

மந்தகதியில் செயற்பட்டுகொண்டிருக்கும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவை களைக்க வேண்டும் என மேலும்  தெரிவித்த அவர், பொலிஸ்மா அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவர உள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments