மைத்திரி, கோத்தா கொலைச் சதி – இரு எல்எம்ஜி துப்பாக்கிகள் மீட்பு


சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டமை குறித்து விசாரிக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இரண்டு இலகு இயந்திரத் துப்பாக்கிகள் (எல்எம்ஜி) கைப்பற்றப்பட்டுள்ளன.

பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட இந்த இரண்டு இலகு இயந்திரத் துப்பாக்கிகளும், கொலைச் சதிக்குப் பயன்படுத்த திட்டமிடப்பட்டிருந்ததா என்ற கோணத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிக்கு இலகு இயந்திரத் துப்பாக்கிகள் தேவையில்லை என்ற போதும், இவை அந்தப் பிரிவின் பொறுப்பில் இருந்தமை குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இந்த இலகு இயந்திரத் துப்பாக்கிகள் பம்பலப்பிட்டியில் உள்ள சிறிலங்கா காவல்துறையின் மத்திய ஆயுத களத் தலைமையகத்தினால், காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் ஆணையின்படியே பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.

No comments