வடக்கில் இந்திய குடியேற்றம் - அரசு மறுப்பு


வட மாகாண சபையின் அரசியல் அதிகாரத்திலுள்ளவர்கள் 250 இந்திய குடும்பங்களை அந்த மாகாணத்தின் கிராமம் ஒன்றில் (நெடுங்கேணியில்) குடியமர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானதென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,

"வட மாகாண சபையின் அரசியல் அதிகாரத்திலுள்ளவர்கள் 250 இந்திய குடும்பங்களை அந்த மாகாணத்தின் கிராமம் ஒன்றில் (நெடுங்கேணியில்) குடியமர்த்தியுள்ளதாக பொதுமக்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான ஊடக அறிக்கைகளுக்கு அரசாங்க தகவல் திணைக்களம் தனது கவனத்தை செலுத்தியுள்ளது.

குறித்த வெளிநாட்டு பிரஜைகள் அல்லது குடும்பங்கள் நாட்டின் எந்த பாகத்திலும் குடியமர்த்தப்படாததன் காரணத்தினால், அரசாங்க தகவல் திணைக்களம் இந்த குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என குறிப்பிட விரும்புகின்றது.

2009ஆம் ஆண்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், இந்தியாவிற்கு யுத்தத்தின்போது அகதிகளாக சென்ற 10,675 இலங்கைப் பிரஜைகள் இன்று வரை தமது சொந்த விருப்பத்தின் பேரில் இலங்கைக்கு நாடு திரும்பியுள்ளனர். இந்த அனைத்து நபர்களும் இலங்கைப் பிரஜைகள் ஆவதுடன், அவர்களது குடியுரிமை நிலை முறையாக நிரூபிக்கப்பட்டுள்ளது." - என்றுள்ளது.

No comments