வேறு இடங்களில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதா மன்னார் புதைகுழி?


மன்னார் ‘சதொச’ வளாகத்தில் மீட்கப்பட்டுவரும் புதைகுழியிலுள்ள மனித வன்கூட்டுத்தொகுதிகள் வேறு பகுதிகளில் வைத்து படுகொலை செய்யப்பட்ட பின்னர் அப்பகுதிக்கு எடுத்துவரப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இறுதி யுத்ததில் சரணடைந்தவர்கள் மற்றும் கைதானவர்கள் படைத்தளங்களில் கொல்லப்பட்ட பின்னர் வெளியே வேறு இடங்களில் அவர்களது உடலங்கள் புதைக்கப்பட்டமை தொடர்பில் ஏற்கனவே படையினர் மூலம் தகவல்கள் கசிந்திருந்தன.

மன்னார் புதைகுழி தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை ஏற்படுத்த கூடிய வகையில் தொடர்சியாக மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றது.
எனினும் வன்கூட்டு தொகுதிகளில் கொலை செய்யப்பட்டமை தொடர்பான சான்றாதாரங்கள் எவையுமே கண்டுபிடிக்கப்படவில்லை.இதனால் அவர்கள் வேறுபகுதிகளில் கொலை செய்யப்பட்ட பின்னர் அங்கு எடுத்துவரப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. 

இதனிடையே இதுவரை 126 முழுமையான மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 120 மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டு, பொதி செய்யப்பட்டு, நீதிமன்ற கட்டடத்தொகுதியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மன்னார் நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைகழக போராசிரியர் தலைமையில் மன்னார் ‘சதொச’ வளாகத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மற்றும் புதிதாக அடையாளப் படுத்தப்படும் மனித எலும்புக்கூடுகளை அப்புறப்படுத்தும் மற்றும் ஆய்வு செய்யும் பணி இடம் தொடர்ந்தும் பெற்றுவருகின்றது.

இந்த நிலையில் நேற்று இடம் பெற்ற அகழ்வு பணியின் போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாம்? என சந்தேகத்தை ஏற்படுத்தகூடிய மனித எச்சம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

கைகள் இரண்டும் நெருக்கமாக பிணைக்கப்பட்ட நிலையிலும் கால்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று குறுக்காக பிணைக்கப்பட்ட விதத்திலும் மிகவும் நெருக்கத்துக்குள் புதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. 

எனினும் இது வரை மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மற்றும் புதைக்கப்பட்ட நிலை மூலமாக குறித்த மனித உடல்கள் சாதாரண நிலையில் புதைக்கப்பட்டவை என நிச்சயம் ஏற்று கொள்ள முடியாத விடயமாக காணப்பட்டலும் இறுதிக்கட்ட பரிசோதனையின் பின்னரே தெரியவரும் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments