தமிழ்நாடு டக்ளஸை தேடுகின்றது: அவரோ டெல்லி செல்கிறார்!

இந்தியாவின் சூளைமேடு துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் தேடப்படுகின்ற டக்ளஸ் இரா.சம்பந்தன் சகிதம் டெல்லி பயணமாகின்றார்.
இதனிடையே  1986 ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பான தன்மீதான குற்றச்சாட்டுக்கள் ஒரு அரசியல் உள் நோக்கமுடையது என டக்ளஸ் வியாக்கியானம் அளித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் கட்சிகளின் தலைவர்களை புதுடில்லிக்கு வருமாறு இந்திய அரசு அழைத்துள்ளது. இந்நிலையில் இலங்கை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் கொண்ட குழு ஒன்று எதிர்வரும் 9 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் செல்லவுள்ள குழுவில் எதிர்க்கட்சி தலைவர் இரா சம்பந்தன், அமைச்சர்களான நிமால் சிறீபாலடி சில்வா, ராவூப் ஹக்கீம், லக்ஸ்மன்கிரியல்ல, றிசாட்பதீயுதின், மனோகணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா. தினேஸ்குணவர்த்தன, விஜிதஹேரத் ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.

இந்நிலையில் 1986 ஆம் ஆண்டு சென்னை சூழைமேட்டில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில்; டக்ளஸ் தேவானந்தா மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இந்தியாவின் தேடப்படும் குற்றவாழியாக டக்ளஸ் தேவானந்தாவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருக்கின்றது.

இது ஒரு அரசியல் உள் நோக்கமுடையது. நீதிமன்றுக்கு யாராவது சமூகமளிக்கவில்லை என்றால் அந்த நீதிமன்றத்தால் அவரை கண்டுபிடிக்குமாறு அல்லது அழைத்து வந்து நீதிமன்றில் ஆஜர்படுத்தும்படி பொலிசாருக்கு ஆணையிடுவது வழமை.

இந்த சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லாதுவிட்டாலும் ஈ.பி.ஆர.எல்.எவ். என்ற அமைப்பில் இருந்த காரணத்தால் அமைப்பில் இருந்த எனது பொறுப்பு காரணமாக அந்தவழக்கை நான் எதிர்கொண்டிருந்தேன். அதன் பின்னர் இந்திய மத்திய அரசினதும் தமிழ் நாட்டு அரசாங்கத்தினதும்  ஒப்புதல் பெற்று  நான் 1990 ஆம் ஆண்டு இலங்கை மீண்டிருந்தேன்.

அந்த சந்தர்ப்பத்தில் இலங்கையில் நான் இருந்தமையால் நீதிமன்றுக்குச் சமூகமளிக்கவில்லை என்ற காரணத்தால் நீதிமன்று எனக்கு  அழைப்பாணை  ஒன்றை பிறப்பித்திருந்தது. அதன் பின்னர் நான் அதற்கு சரியான காரணத்தை கொடுத்திருந்தமையால் அந்த அழைப்பாணை எப்போதோ நீக்கப்பட்டுவிட்டது.

அதனால் குறித்த வழக்கு தொடர்பாக எனக்கு எந்தவொரு பிரச்சினையும் கிடையாது. தற்போதும் அந்த வழக்கு விசாரணை இருக்கின்றது. இதற்கு நான் வீடியோ காணொளியூடாக முன்னிலையாகி வருகின்றேன். அதுமட்டுமல்ல அந்த வழக்கு மிகவிரைவில் நிறைவுக்கு வந்துவிடும் என்றும் நம்புகின்றேன் என டக்ளஸ் விளக்கமளித்துள்ளார்.

No comments