ஈழத்து டிராபிக் ராமசாமி கைது:நீதிமன்ற அவமதிப்பாம்?


 காவல்துறையினர்  இலஞ்சம் பெறுவதாக தெரிவித்து கிளிநொச்சியில் மரத்தில் ஏறி போராட்டம் நடத்திய முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் நீதி மன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சுமத்தி கைதாகியுள்ளார்.

கிளிநொச்சி காவல்துறையினர் இலஞ்சம் வாங்குவதாக தெரிவித்து முதியவர் ஒருவர் நீதி அமைச்சர் , பிரதம நீதியரசர் ஆகியோருக்கு முன்னால் மரத்தில் ஏறி நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடாத்தியிருந்தார். 


கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டட தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றைய தினம் திங்கட்கிழமை காலை நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்த நீதி அமைச்சர் தலதா அத்துகோரல , கிளநொச்சி மாவட்ட நீதிபதிகள் , கிளிநொச்சி - முல்லைத்தீவு பிரதி காவல்துறை அதிபர் உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்திருந்த வேளை மேடைக்கு எதிரே வீதியோரமாக இருந்த மரத்தில் முதியவர் ஏறி கோசம் எழுப்பினார். 

முதியவர் மரத்தின் மீது ஏறி நின்று இலஞ்ச ஊழலுக்கு எதிரான சுவரொட்டியை கையில் ஏந்திய வண்ணம் இலஞ்ச ஊழலுக்கு எதிராக கோசம் எழுப்பினார். 

கிளிநொச்சி காவல்துறையினர் இலஞ்சம் வாங்குவதாகவும் , தன்னை கிளிநொச்சி காவல் நிலையத்தில் கடமையாற்றும் பொலிசார் ஒருவர் அச்சுறுத்தி இலஞ்சம் பெற்றார் எனவும் குற்றம் சாட்டி இருந்தார். 

அதனை அடுத்து குறித்த மரத்தின் கீழ் சென்ற சட்டத்தரணிகள் , காவல்துறையினர் முதியவருடன் சமர பேச்சில் ஈடுபட்டு அவரை மரத்தில் இருந்து இறங்கினார்கள். மரத்தில் இருந்து இறங்கிய முதியவரை காவல்துறையினர் அங்கிருந்து வெளியே அழைத்து சென்றனர்.

எனினும் தற்போது அவர் நீதிமன்றத்தை அவமதித்ததாக கைதாகியுள்ளார்.

No comments