செஞ்சோலைப் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்



முல்லைத்தீவு செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது ஆகஸ்ட் 14, 2006 அன்று இலங்கை விமானப்படையினர் திட்டமிட்ட துல்லியமான தாக்குதலில் 61 சிறுமிகளை கோரப் படுகொலை செய்த 12 ஆவது ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அன்றைய தாக்குதலில் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். கொல்லப்பட்ட மற்றும் காணமடைந்தவர்களில் பெரும்பாலனவர் 15-18 வயதுக்கு உட்பட்ட க.பொ.த உயர்தரத்தில் கல்விகற்கும் ஆவர்.

2006ஆம் ஆண்டு காலை 6 மணிக்கு இலங்கை வான்படையின் இரண்டு கிபிர் விமானங்கள் செஞ்சோலை சிறுவர் இல்லம் மீது குண்டுத்தாக்குதலை நடத்தின. அத்தாக்குதலில் 61 மாணவிகள் கொல்லப்பட்டதுடன், 150 இற்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்திருந்தனர். அப்போது இந்த சம்பவம் தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசம் எங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

12 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அந்த கொடிய நிகழ்வை யாராலும் மிக எளிதாக கடந்து போக முடியாது. போரால் பெற்றோரை, பாதுகாவலரை இழந்த பெண்பிள்ளைகளின் பாரமரிப்புக்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனினால் 1991 ஐப்பசி 23ஆம் திகதி செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எனினும், தாக்குதலில் செஞ்சோலை சிறுவர் இல்ல மாணவிகள் சிக்கவில்லை. அங்கு கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் அழைத்து வரப்பட்டு  தலைமைத்துவ பயிற்சியளிக்கப்பட்டனர். இதை அறிந்து, 2006ஆம் ஆண்டு காலை 6 மணிக்கு இலங்கை அரச வான்படையின் இரண்டு கிபிர் விமானங்கள்  மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தின. ஆளில்லா விமானங்கள் அப்போது வானத்தில் வட்டமிட்டபடியிருந்தன.

இதில் 61 மாணவிகள் கொல்லப்பட்டதுடன் 150இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களில் பலர் தற்போது சிறப்புத் தேவையுடையவர்களாக உள்ளனர். இந்த தாக்குதல் விடுதலைப் புலிகளின் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டோர் மீதே நடத்தப்பட்டது என இலங்கை அரசு அப்போது உலக நாடுகளுக்குத் தெரிவித்திருந்தது.

எனினும் மாணவிகள் தலைமைத்துவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த போதே விமானத் தாக்குதல் நடப்பட்டது என புலிகள் தெரிவித்திருந்தனர்.

சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட நடுநிலை அமைப்புக்களான ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமும் இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் கொல்லப்பட்ட அனைவரும் அப்பாவி மாணவர்களே என்பதை உறுதிசெய்தன.

மாணவர்களுக்கான குறித்த இப்பயிற்சி நெறி "கிளிநொச்சி கல்விவலயத்தால்" ஒழுங்கமைக்கப்பட்டு,"Women's Rehabilitation and Development (CWRD)" நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டதும் உறுதிசெய்யப்பட்டது.

No comments