தமிழ் மீனவர்கள் அநாதரவாக:சிங்களவருக்கோ விசேட பாதுகாப்பு!


முல்லைத்தீவு நாயாறுப் பகுதியில் ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள சிங்கள மீனவர்கள் கடற்படையின் பாதுகாப்பிலேயே இருக்கின்றனர்.அவர்களது கண்காணிப்பிலேயே அடாவடியில் ஈடுபடுகின்றனர்.சட்டத்தை இயற்றுபவர்களாக அவர்களே உள்ளனர்.அதனை மீறுபவர்களாகவும் அவர்களே உள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே நேற்று முன்தினம் இரவு தமிழ் மீனவர்களின் வாடிகளிற்கு தீ வைத்தமையினால் சுமார் 5 மில்லியன் வரையில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே முல்லைத்தீவு மாவட்டம் நாயாறுப் பகுதியில் தமிழ் மக்களின் வாடிகளிற்கு சிங்கள மீனவர்கள் எனச் சந்தேகிப்பவர்களால் வேண்டுமென்றே தீ வைக்கப்பட்ட சம்பவத்தினால் 8 வாடிகள் முற்றாக அழிவடைந்துள்ளன.இதனால் பாதிக்கப்பட்ட 9 குடும்பங்களின் தொழில் உபகரணங்கள் மற்றும் அடிப்படை உபகரணங்கள் என அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

இதே நேரம் தாமும் சிங்கள மீனவர்களால் பழிவாங்கப்படலாமென்ற  அச்சம் காரணமாக பெருமளவிலான தமிழ் மீனவர்கள் தொழிலிற்கு செல்லவில்லை.
இப் பகுதியில். வெறுமனே இரண்டு இலங்கை காவல்துறையினர்மட்டும் கடமைக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். 

ஆனால் பாதிக்கப்பட்ட தமிழ் மீனவர்களிற்கு எந்த பாதுகாப்பு இல்லாத நிலையில் சிங்கள மீனவர்களிற்கு கடற்படை மற்றும் இராணுவம் சீருடையிலும் சிவில் உடையிலும் பாதுகாப்பு வழங்கிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments