புலனாய்வு பிரிவிற்கெதிராக திரண்ட மக்கள் பிரதிநிதிகள்!


இலங்கை இராணுவப்புலனாய்வு பிரிவினரது அச்சுறுத்தல்கள் தொடர்பில் இணைந்து குரல் கொடுக்க தயாராக இருப்பதாக யாழ்.மாநகரசபையினில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.அத்துடன் திலீபனின் நினைவு தூபியைச் சுற்றி பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த யாழ்ப்பாண மாநகர சபை ஊழியர்களை, இராணுவ புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியமையைக் கண்டித்து, மாநகர சபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுமுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த கூட்டம், இன்று காலை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது. 

இதன்போது , யாழ்.மாநகர சபை ஊழியர்களை அச்சுறுத்தியமைக்கு மாநகர சபை உறுப்பினர்கள் தமது கடும் கண்டனங்களை தெரிவித்தனர். 

கடந்த 14ஆம் திகதி மாநகர சபை பணியாளர்கள் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அவ்விடத்துகு சிவில் உடையில் வந்தவர்கள் தம்மை இராணுவ புலனாய்வாளர்கள் என அறிமுகப்படுத்திக்கொண்டு, பணியாளர்களை “வெளியில் சந்தோஷமா வாழ ஆசையில்லையா?” , “பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா?” என பணியாளர்களை கேட்டு அச்சுறுத்தியிருந்தனர்.

அதனால் அச்சமடைந்த பணியாளர்கள், வேலி அடைக்கும் வேலையை கைவிட்டு, அலுவலகம் திரும்பி, தாம் அந்த பணியில் ஈடுபடமாட்டோம் என தெரிவித்தனர்.

அதனால், வேலி அடைக்கும் மிகுதி பணி, வெளியில் இருந்து தற்காலிக வேலைக்கு பணியாளர்களை அமர்த்தி யாழ். மாநகரசபையால் பூரணப்படுத்தப்பட்டது. 

இதேவேளை, அன்றைய தினம் ஊழியர்கள் அச்சுறுத்தப்பட்ட சம்பவத்தை கேள்வியுற்று அவ்விடத்துக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் சென்று, நிலைமைகள் ஆராய்ந்து இருந்தார். 

குறித்த சம்பவத்தை கேள்வியுற்றவுடன் ஏன் தமக்கு அறிவிக்கவில்லை எனவும், அறிவித்து இருந்தால் தாமும் சம்பவ இடத்துக்கு வந்து ஒத்துழைப்பை வழங்கி இருப்போம் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

No comments