யாழில் 22 பேர் கைது


யாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களில் இடம்பெற்ற வாள்வெட்டு, வீடுகள் மீதான தாக்குதல், மனித அச்சுறுத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம், கோப்பாய், சுன்னாகம் மற்றும் மானிப்பாய் ஆகிய பிரதேசங்களில் நேற்று (06) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் படி யாழ்ப்பாணம், கோப்பாய், சுன்னாகம் மற்றும் மானிப்பாய் போன்ற பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டு விஷேட சோதனை நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் பிரதேசத்தில் இயங்குகின்ற ஆவா குழு, தனுராக் குழு, விக்டர் குழு போன்ற குழுக்களின் உறுப்பினர்களால் கடந்த நாட்களில் பல சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தமை தொடர்பில் தகவல்கள் பதிவாகியுள்ளன.

குறைந்த வயதுடையவர்கள் அந்தக் குழுக்களுடன் இணைந்து கொள்வதாகவும், அவ்வாறான குழுக்களை அடக்குவதற்காக கடந்த 01ம் திகதி முதல் விஷேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் பொலிசார் தெரிவித்தனர்.

No comments