முதலமைச்சர் கேட்டால் இராஜினாமாச் செய்வேன் - அனந்தி


வடமாகாண அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பாக ஆளுநர் எழுத்து மூலம் முதலமைச்சருக்கு அறிவித்தால் இராஜினாமா செய்வது தொடர்பில் பரிசீலணைகள் செய்யப்படுமென வடமாகாண மகளீர் விவகாரம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். 

வடமாகாண அமைச்சு தொடர்பாக எழுந்துள்ள குழப்பநிலையைத் தீர்ப்பதற்கு அமைச்சர்கள் தாமாக பதவியை இராஜானாமா செய்ய வேண்டுமென வடமாகாண ஆளுநர் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியிருந்தார். 

தற்கால நிலமைகள் தொடர்பில் இன்று (14) மாலை மகளீர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதென ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் அனந்தி சசிதரன் இவ்வாறு தெரிவித்தார். 

வடமாகாண ஆளுநர் அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பாக இவ்வாறான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தால், எழுத்து மூலம் முதலமைச்சருக்கு தெரியப்படுத்தினால், அந்த நடவடிக்கைகள் தொடர்பில் பரிசீலிப்பதற்கு ஏதுவாக இருக்கும். 

இராஜினாமா தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் எதுவும் முதலமைச்சருக்கோ எமக்கோ கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

ஏற்கனவே இருக்கின்ற 5 அமைச்சர்களும் நீதிமன்ற அறிவித்தலின் பின்னர் ஒன்றுகூடவில்லை. ஆனால், டெனிஸ்வரனின் வர்த்தக வாணிப அமைச்சினை மீளத்தருமாறு முதலமைச்சர் கோரினால், முதலமைச்சரிடம் நான் மீளக் கையளிப்பேன் என்றார். 

5 ஏனைய அமைச்சர்களும், டெனிஸ்வரனிடம் அமைச்சுப் பதவிகளை கையளித்து விட்டு இராஜினாமா செய்யத் தயாராக இருக்கின்றீர்களா, ஏன் உறுதியான முடிவுகளை எடுத்து மாகாண சபையின் நடவடிக்கைகள் முன்னெடுக்க தவறுகிறீர்கள் என மீண்டும் கேட்ட போது, நீதிமன்ற விடயத்தினை விமர்ச்சிக்க முடியாதென்றும் அமைச்சர்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளதாவும் அவர் தெரிவித்தார். 

இதுவரையில் எந்த அழைப்பும் எனக்கு விடுக்கப்படவில்லை. இராஜினாமா தொடர்பில் முதலமைச்சர் அறிவித்தால், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார். 

No comments