இராணுவ பிரசன்னத்திற்காக நகர்வில் அரசு!


இலங்கை அரசபடைகளை அரசாங்கத்தின் தேசிய அபிவிருத்தி மூலோபாயத்துடன் கைகோர்த்துக்கொண்டு செல்லும் நகர்வை இலங்கை இராணுவம் ஆரம்பித்துள்ளது.

யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாரச்சியினால், யாழ். குடாநாட்டில் இராணுவ அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கான எக்ஸ்பிரஸ் நோக்கத்துடன், நிகழ்ச்சித் திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் இது வடக்கில் படையினரை தொடர்ந்தும் தக்கவைத்திருப்பதற்கானதொரு உத்தியாக தமிழ் அரசியல் தலைமைகள் குற்றஞ்சுமத்திவருகின்றன.

குறிப்பாக இராணுவத்திற்கு தமிழ் கூலியாட்களை தெரிவு செய்வதுடன் கட்டட நிர்மாணம்,மருத்துவ உதவிகள்,மரநடுகையென பலவற்றினை தன்னிச்சையாக சிவில் கட்டமைப்புக்களை புறந்தள்ளி படைத்தரப்பு முன்னெடுத்துவருகின்றது.

தற்போது இராணுவப் பொறியியலாளர் படையணியில் மூன்று பொறியாளர்களால் நிர்வகிக்கப்படும் தமிழ் தொழிலாளர் பிரிவினில்; பிரதானியாக பிரிகேடியர் சந்தன விஜேசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்பொழுது ஜனாதிபதி செயலகத்தின் 'பிபிதெமு பொலன்னறுவை' திட்டத்துக்குப் பொறியியலாளராக கடமை ஆற்றி வருவதாக சொல்லப்படுகின்றது.

குறித்த அமைப்பு அரசாங்கம் மற்றும் பிற அரசு நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்திக் கருத்திட்டங்களும் எதிர்காலத்தில் ஒத்துழைப்பை வழங்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மத்தேகொடையில் நடந்த இந்த நிகழ்வுக்கு, பிரதம அதிதியாக வருகை தந்த பொறியியல் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாரச்சி  பௌத்த மத ஆசிர்வாத பூஜைகளினை நடத்தியிருந்தார்.

இந்த நிகழ்வில், இராணுவ பொறியியலாளர் பிரதானி மேஜர் ஜெனரல் டீ.எஸ் வீரமன், குவாடர் மாஸ்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் எச்.ஜே.எஸ்.குணவர்தன, பணிப்பாளர் நாயகம் நடவடிக்கை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் எம்.எம்.எஸ்.பெரேரா, பொறியியலாளர் படையணியின் கட்டளை தளபதி பிரிகேடியர் டப்ள்யூ.எம்.ஜி.சி.எஸ் விஜேசுந்தர, பொறியியலாளர் படையணியின் பிரதிக் கட்டளை அதிகாரி பிரிகேடியர் எஸ்.டி.பீ.திசாநாயக மற்றும் இராணுவ சிரேஸ்ட அதிகாரிகளும் இணைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments