இந்துக்களின் எதிர்ப்பின் எதிரொலி - பதவி விலகுகிறார் பிரதி அமைச்சர் மஸ்தான்



இந்துக் கலாசார பிரதி அமைச்சை தவிர்த்து மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சராக மீளவும் பதவிப் பிரமாணம் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாளை வியாழக்கிழமை சந்திக்கவுள்ளதாக பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

இந்து கலாசார அமைச்சை இந்து மதம் சாராத ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளமைக்கு இந்துக்கள் சார்பில் கடும் எதிப்புக்கள் எழுந்த நிலையிலேயே இந்த முடிவுக்கு வந்ததாக கசாதர் மஸ்தான் குறிப்பிட்டார்.

“இந்து கலாசார பிரதி அமைச்சுப் பொறுப்பை எனது கட்டுப்பாட்டிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எழுத்துமூல கோரிக்கையை இன்று முன்வைத்தேன். அதுதொடர்பில் சாதகமாகப் பரிசீலிப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாளைய தினம் ஜனாதிபதி செயலகத்துக்கு வருகை தருமாறு பதிலளித்துள்ளார்.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சை நான் கேட்டுப் பெற்றுக்கொண்டேன். அவற்றுடன் இணைந்து இந்து கலாசார அமைச்சும் உள்ளது. அதனால்தான் இந்துக் கலாசார அமைச்சுப் பொறுப்பும் என்னிடம் வந்தது. மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சை மட்டும் நான் வைத்துக் கொள்வதற்காக மீளவும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவேண்டும்.

அதற்காக ஜனாாதிபதியை நாளை சந்திக்கின்றேன்” என்று பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் மேலும் தெரிவித்தார்.

No comments