பெறாமகளுக்கு உணவு கொடுக்காது சாகடித்த சிறியதாய் - சுன்னாகத்தில் பரிதாப மரணம்


உண்பதற்கு உணவு வழங்கப்படாமல் சிறியதாயினால் கொடுமைப்படுத்தப்பட்ட நிலையில் மெலிவடைந்து யுவதி ஒருவர் மரணமடைந்துள்ள சம்பவம்  சுன்னாகத்தில் இடம்பெற்றுள்ளது.

சுன்னாகம் ஈவினை மத்தியை சோந்த செல்வநாயகம் சுகாயினி (வயது 36) என்ற யுவதியே அவரது வீட்டு வளவில் ஈக்கள் மொய்த்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதியின் தாய் தந்தை இறந்த பின்னர் சிறிய தாயுடன் வசித்து வந்துள்ளார். சிறியதாய் ஆசிரியராக கடமையாற்றுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த யுவதி தனது தந்தையார் இறந்த பின்னபு மிகவும் உளரீதியாக பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார். எனினும் அவரது சிறியதாயார் குறித்த யுவதிக்கு உணவுகள் வழங்குவதில்லை எனவும் அவரைக் கொடுமைப்படுத்திவந்ததாகவும் அயலவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டின் வளவில் குறித்த யுவதி முகம் குப்பற விழுந்து கிடந்ததுடன், உடல் முழுவதும் எறும்பு ஈக்கள் மொய்த்த நிலையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.

பாடசாலை முடித்து விடுதிரும்பிய சிறியதாய் யுவதி நிலத்தில் கிடப்பதை கண்டதும் உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார். சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த யுவதியின் சடலம் மிகவும் கொடூரமாக மெலிவடைந்து பரிதாபமானதாகவும் காணப்பட்டமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.

குறித்த யுவதியின் உடலினை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் இதுவரை யாழ்ப்பாணத்தில் இவ்வாறு உடல் மெலிந்தநிலையில் இறந்த ஒருவரை தாங்கள் காணவில்லை என அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.

No comments