ஸ்ரீலங்காவில் இன்புழுவென்சா வைரஸ் காய்ச்சலினால் 14 குழந்தைகள் உயிரிழப்பு

ஸ்ரீலங்காவில் பரவிவரும் இன்புழுவென்சா வைரஸ் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த எட்டு மாத ஆண் குழந்தையொன்று கடந்த புதன் கிழமை இரவு உயிரிழந்துள்ளது.

அந்த மரணத்துடனேயே குறித்த வைரஸ் காய்ச்சலினால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளது. அந்தக் குழுந்தை ஆறு வார காலம் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே கடந்த புதன் கிழமை இரவு உயிரிழந்துள்ளது.

வலஸ்கல பிரதேசத்தைச் சேர்ந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தையை இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இன்புழுவென்சா எடினோ உள்ளிட்ட வைரஸ் தொற்றுக்கு இலக்காகி மே மாதம் முதலாம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கராபிட்டிய போதனா வைத்தியசாலை, அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் சிறுவர் வாடுகளில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 13 குழுந்தைகள் உயிரிழந்துள்ளதாக கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கராப்பிட்டிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குழந்தையொன்று வைரஸ் காய்ச்சல் உச்ச நிலையடைந்ததையடுத்து ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த வைரஸ் காய்ச்சலுக்கு இலக்காகி மத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு குழந்தைகளும் காலி மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த தலா மூன்று குழந்தைக்ளும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments