பல்கலை மாணவர் வழக்கை சுமந்திரன் சயந்தனிடம் கொடுத்துவிட்டு வாய்பார்த்த மாணவர் ஒன்றியம்


யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் ஜனாதிபதியின் வாக்குறுதியை நம்பியிருந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறித்த வழக்கினை தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி சுமந்திரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர் சயந்தனிடம் கையளித்துவிட்டு குறித்த வழக்குத் தொடர்பில் அக்கறை கொண்டிருக்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனாலேயே குறித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்களில் மூவரை விடுவிக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களம், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பணிக்கும் அளவிற்கு நிலமைகள் மோசமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் 3 மாதங்களுக்கு உரிய விசாரணைகளை முறிவுறுத்தி நீதி வழங்கப்படும் என மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியிருந்தார்.

அதனையடுத்தே மாணவர்கள் தமது போராட்டத்தைக் கைவிட்டனர். எனினும் அடுத்து வந்த மாணவர் ஒன்றியம்  குறித்த வழக்கினை தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி சுமந்திரன் மற்றும் சயந்தனிடம் கையளித்துவிட்டு இந்த விவகாரத்தை தட்டிக் கழித்து பாராமுகமாக நடந்துகொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

No comments