தூத்துக்குடி படுகொலையினை ஐ.நாவில் பதிவு செய்த மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி

இந்திய அரசு தமிழ்நாட்டில் தூத்துக்குடி மக்களின் மீது ஒரு வன்முறையினை ஏவிவிட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்தின் கார்ப்பரேட் நிறுவனமான வேதாந்தா ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் போராடி வருகிறார்கள்.

இந்த பெரிய அபாயகரமான ஆலையானது மன்னார் வளைகுடாவிற்கு 15 கி.மீ சுற்றளவிற்கு உள்ளாக உள்ளது. அந்த ஆலையைச் சுற்றி 7 கி.மீக்கு உள்ளாக 2,50,000 மக்கள் வசிக்கிறார்கள். அந்த ஆலை வெளிப்படுத்தும் நச்சுக்கள் தூத்துக்குடியை சுற்றியுள்ள 7,00,000 மக்களுக்கு பாதிப்பினை உண்டாக்குகிறது. 2018 இல் அந்த ஆலை விரிவாக்கத்திற்கு முன்வைக்கப்பட்ட போது மக்கள் மீண்டும் போராட ஆரம்பித்தனர்.

போராட்டத்தின் 100வது நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைதியாக போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச் சூட்டினை காவல்துறை நிகழ்த்தியுள்ளது. 17 வயது பள்ளி சிறுமி ஸ்நோலின் உட்பட 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்ட அப்பாவி போராட்டக்காரர்கள் படுகாயமடைந்துள்ளனர். சீருடையில் இல்லாத நபர்கள் போராட்டக்காரர்களை நோக்கி அவர்களின் உயிரைப் பறிக்கும் நோக்குடன் சுட்டதற்கான காணொளிகள் வெளியாகியுள்ளன.

போராட்டத்தில் ஈடுபட்ட பலர் அருகிலிருந்து சுடப்பட்டுள்ளனர். காவல்துறை வீடுவீடாக சென்று இளைஞர்களை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்து வருகிறது. தற்போது வரை இப்படியான தேடுதல்களும், கைதுகளும் நடைபெற்று வருகின்றன. துப்பாக்கி சூடு நடத்துவதற்கான உத்தரவை அளித்ததற்கு இதுவரை எந்த அதிகாரிகளும் பொறுப்பேற்கவில்லை. ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது வரை படுகொலையை நிகழ்த்தியதற்கான பொறுப்பேற்றல் நிகழவில்லை.

தூத்துக்குடியின் தற்போதைய நிலையினை கருத்தில் கொண்டு, மனித உரிமை மீறல்களும், காவல்துறை ஒடுக்குமுறைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்பதை இந்த ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

No comments